TBVWebLogo

வளரிளம் தமிழர்கள் கலைக்களமாடிய கலைத்திறன் – கற்றிங்கன்

வளரிளம் தமிழர்களின் கலையாற்றுகைக் களமாய் விரியும் தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவால் நடாத்தப்படும் கலைத்திறன் போட்டியின் வடமத்திய மாநில அரங்காற்றுகை 07.02.2026 சனிக்கிழமை கற்றிங்கன் நகரில்  தமிழர் கலைபண்பாட்டுக் கழகத்தின் மூத்த நடன ஆசிரியர்களில் ஒருவரான முனைவர் திருமதி சாவித்திரி சரவணன் அவர்கள் பொதுச்சுடரேற்றியதைத் தொடர்ந்து, யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் பொறுப்பாளர் திருமதி வசந்தி மனோகரன், த.ஒ.குழுவின் வடமத்திய மாநிலப் பொறுப்பாளர் திரு முத்துவேல் ஜெயவலதாஸ், தமிழர் கலைபண்பாட்டுக் கழகத்தின் மூத்த நடன ஆசிரியர்களில் ஒருவரான  திருமதி வசுந்தரா சிவசோதி, நடன ஆசிரியரான திருமதி சஞ்சியா ராமராஜன், தமிழ்க் கல்விக் கழகத்தின் வடமத்திய மாநிலச் செயற்பாட்டாளர்களான “தமிழ் வாரிதி” திருமதி வளர்மதி யோகஜெகதீஸ்வரன், “தமிழ் மாணி” திரு. கந்தையா அம்பலவாணபிள்ளை, திருமதி மகிழ்தினி சரவணமுத்து, வடமத்திய மாநிலக் கலைப்பிரிவுச் செயற்பாட்டாளர் திருமதி சாரதா ராஜ்குமார், மாநிலத் துணைச் செயற்பாட்டாளர் “தமிழ் மாணி” திரு. தாமோதரம்பிள்ளை நற்குணராசா, யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் நிருவாகப் பொறுப்பாளர் “தமிழ் மாணி” திருமதி கலா ஜெயரட்ணம் ஆகியோர் மங்கல விளக்கினை ஏற்றினர். அகவணக்கம், தமிழாலயப்பண் மற்றும் கலைப்பிரிவுப் பொறுப்பாளர் “தமிழ் மாணி” திரு. மார்க்கண்டு பாஸ்கரமூர்த்தி அவர்களது வரவேற்புரையைத் தொடர்ந்து போட்டிகள் தொடங்கின. இவ்வாண்டுக்கான கலைத்திறன் போட்டியில் மயிலாட்டம், காவடியாட்டம், புலியாட்டம், காவடி, கரகம், பொய்க்காற்குதிரை, பரதநாட்டியம், விடுதலை நடனம், கூத்து மற்றும் விடுதலைப் பாடல், வாய்ப்பாட்டு போன்றன போட்டிகளாக இடம்பெற்றன.

தமிழர் கலைகளுள் தேர்வு செய்யப்பட்ட கலைகளுக்கான போட்டிகள் தொடங்கியதிலிருந்து நிறைவுவரை மிகவும் உற்சாகத்தோடு நடைபெற்றது. புத்தாக்கமாக உருப்படிகளின் உருவாக்கத்தில் அரங்கை அணிசெய்த வாள்நடனம் மற்றொரு சிறப்பாக்கமாகப் பார்வையாளர்களின் மனதைத் தொட்டது. குழுநிலை மற்றும் தனிநிலை என இரு அரங்குகளில் அணியமான போட்டிகளில் பங்குபற்றியவர்களை மேன்மையுடன் மதிப்பளித்தனர். போட்டியரங்கிலே சிறப்பு நிகழ்வாக நடனத்துறையிலே முனைவருக்கான பட்ட மேற்படிப்பை நிறைவுசெய்த முனைவர் திருமதி சாவித்திரி சரவணன் அவர்களை அரங்கிற்கு அழைத்து, தமிழ்க் கல்விக் கழகத்தினர் மதிப்பளித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

நிறைவாக முதல் மூன்று நிலைகளைத் தமதாக்கிய வெற்றியாளர்களுக்கான மதிப்பளிப்பு இடம்பெற்றதோடு, புள்ளிகளின் அடிப்படையில் முறையே முதல் மூன்று நிலைகளைத் தமதாக்கிய தமிழாலயம் வாறன்டோர்வ், தமிழாலயம் டோட்முன்ட் மற்றும் தமிழாலயம் முல்கைம் ஆகிய தமிழாலயங்கள் மதிப்பளிப்பைப் பெற்றன. பல்வேறு நகரங்களில் இருந்து இணைந்த பதினாறுக்கு மேற்பட்ட நடுவர் குழாமோடு 08:30 மணிக்குத் தொடங்கிய கலைத்திறன்போட்டி மதிப்பளிப்புகளோடு,  20:30 மணிக்குத் தமிழினத்தின் நம்பிக்கை முரசறைய நிறைவுற்றது. தொடர்ந்து 14.02.2026 மத்திய மாநிலத்தில் முன்சன்கிளாட்பாக் நகரிலும் 21.02.2026 வடமாநிலத்தில் கனோவர் நகரிலும் 28.02.2026 தென்மாநிலத்தில் ஸ்ருற்காட் நகரிலும் 21.03.2026 தென்மேற்கு மாநிலத்தில் வைற்றர்ஸ்ரட் நகரிலும் நடைபெறவுள்ளது.

 
error:
X