TBVWebLogo

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் யேர்மனியில் நடாத்தப்பட்ட அனைத்துலக அரையாண்டுத் தேர்வு 2022/2023

யேர்மனியில் தமிழ்ச் சிறார்களின் தமிழ்க்கல்வியை வளர்க்க வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையோடும் இலக்கோடும் 100க்கும் மேற்பட்ட தமிழாலயங்களை ஒருங்கிணைத்துச் செயலாற்றிக் கொண்டிருக்கும் தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி, இக்கல்வியாண்டுக்கான அரையாண்டுத் தேர்வை மிகவும் கவனமாகவும் கண்ணியத்துடனும் நேர்மையுடனும் சிறந்த பொறிமுறைகளைக் கடைப்பிடித்து 28.01.2023 சனிக்கிழமை நிறைவேற்றியுள்ளது. யூன் மாதம் நடைபெறவிருக்கும் அனைத்துலகப் பொதுத்தேர்வில் மாணவர்கள் தங்கள் தகுதிகளையறிந்து குறை நெறிகளை நிவர்த்தி செய்யுமுகமாக இத்தேர்வு உதவுகின்றது.
இவ்வனைத்துலக அரையாண்டுத்தேர்வு நாடுதழுவிய மட்டத்தில் 90க்கு மேற்பட்ட தேர்வு நிலையங்களில் நடைபெற்று நிறைவுற்றுள்ளது. ஒவ்வொரு நிலையத்திற்கும் ஒவ்வொரு சிறப்புக் கண்காணிப்பாளர் என்ற அடிப்படையில் 90க்கும் மேற்பட்ட ஆசிரியப்பெருந்தகைகள் தமிழ்க் கல்விக் கழகத்தின் விதிமுறைகளுக்கேற்ப கடமையுணர்வோடும் தமிழை வளர்க்கும் நல்லெண்ணத்தோடும் இப்பணியில் ஈடுபட்டனர். பெரும்பாலான தமிழாலயங்கள் தனியாகவும் சில தமிழாலயங்கள் இணைந்தும் தேர்வு நிலையங்களை அமைத்திருந்தன.
காலை 8:00 மணி தொடக்கம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் தேர்வுமண்டபத்தை நோக்கி வருகைதரத் தொடங்கினார்கள். காலை 9:00 மணிக்குத் தொடக்க நிகழ்வுகளுடன் தொடங்கப்பட்ட அனைத்துலக அரையாண்டுத்தேர்வு, 9:30 மணிக்குத் தேர்வாளர்கள் அனைவரையும் தேர்வு மண்டபத்தில் அமர்த்தி சரியாக 10:00 மணிக்குத் தேர்வு தொடங்கப்பட்டது. ஆண்டு 1 தொடக்கம் 3 வரை 11:30 மணிக்கும், ஆண்டு 4 தொடக்கம் 6 வரை 12:00 மணிக்கும், ஆண்டு 7 தொடக்கம் 9 வரை 12:30 மணிக்கும் ஏனைய வகுப்புநிலைகளுக்கு 13:00 மணிக்கும் தேர்வு நிறைவேறியது. தாம் கற்றவற்றை மிக ஆவலுடன் சிறப்புறத் தேர்வெழுதிய மாணவர்கள், தேர்வு நிறைவடைந்த பின் தங்கள் கருத்துகளை பெற்றோர்களுடனும் சகமாணவர்களுடனும் தங்களுக்குக் கற்பித்த ஆசிரியர்களுடனும் பரிமாறி மகிழ்ந்ததைக் கண்காணிக்கக்கூடியதாக இருந்தது.

error:
X