TBVWebLogo

33ஆவது அகவை நிறைவில் தமிழ்க் கல்விக் கழகம் – மத்திய மாநிலம்

தமிழாலயங்களில் இணைந்து கல்வி கற்றுவரும் தமிழ்ச்சிறார்கள் தாய்மொழியோடு, கலை, பண்பாடு, விளையாட்டு எனப் பன்முகத்துறைகளில் செயற்றிறனுடையோராய் வளர்த்தெடுப்பதை நோக்காகக் கொண்டு செயற்பட்டு வருகின்றன தமிழ்க் கல்விக் கழகமும் அதன் நிர்வாகப் பொறிமுறையின் கீழியங்கும் 110க்கு மேற்பட்ட தமிழாலயங்களும். தமிழ்க் கல்விக் கழகம் தனது இலக்கு நோக்கிய பயணத்தில் 33ஆண்டுகளின் நிறைவை, இவ்வாண்டும் ஐந்து மாநிலங்களிலும் சிறப்போடு கொண்டாடத் தொடங்கியுள்ளது. அதனடிப்படையில் 33ஆவது அகவை நிறைவு விழா 15.04.2023 சனிக்கிழமை மத்திய மாநிலத்தின் என்னப்பெற்றால் நகரில் தொடங்கிச் சிறப்புடன் நடைபெற்றது.

சிறப்புவிருந்தினர்களாக மத்திய மாநிலத்தில் என்னப்பெற்றால் நகரபிதா திருமதி இம்கே கேமான் அவர்களும் யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறீரவீந்திரநாதன்; அவர்களும் யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மாநிலப் பொறுப்பாளர்களும் மற்றும் துணை அமைப்புகளின் பொறுப்பாளர்கள், செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
காலை 09:00 மணிக்கு மங்கல விளக்கேற்றல், அகவணக்கத்தோடு தொடங்கிய விழாவை, தமிழ்க் கல்விக் கழகத்தின் செயற்பாட்டாளர்களும் மாநில மட்டத்திலான இளையோரின் பங்கேற்பும் ஒன்றாக இணைந்து செம்மைப்படுத்தின. தமிழ்க் கல்விக் கழகப் பொறுப்பாளர் „செம்மையாளன்“ திரு. செல்லையா லோகானந்தம் அவர்களின் வரவேற்புரையுடன் மதிப்பளிப்பு நிகழ்வுகள் தொடங்கின.

பொதுத்தேர்வு, தமிழ்த்திறன் போன்றவற்றில் தமிழாலய மாணவர்கள் பெற்றுக்கொண்ட திறன்களுக்கான மதிப்பளிப்புகள் சிறப்புடன் அமைய, அம்மதிப்பளிப்புகளுடன் இணைந்து வெற்றிபெற்ற மாணவர்களின் திறன்களை ஒன்றிணைத்ததன் பயனாகத் தமிழாலயங்கள் பெற்றுக் கொண்ட வெற்றிகளுக்கான மதிப்பளிப்புகளும் வழங்கப்பட்டன. தமிழாலய நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஒன்றிணைந்து ஓராண்டு உழைத்ததன் அறுவடையாகத் தேர்வு, கலைத்திறன் போன்றவற்றில் தமிழாலயங்கள் பெற்ற வெற்றிகளை அரங்கில் கொண்டாடி மகிழ்ந்தனர். மத்திய மாநிலத்தின் கலைத்திறன் போட்டியில் மாநில மட்டத்தில் முறையே முதல் மூன்று நிலைகளை தமிழாலயம் கிறேபெல்ட்;;, தமிழாலயம் நொயிஸ், தமிழாலயம் வூப்பெற்றால் ஆகியனவும், யேர்மன்தழுவிய மட்டத்தில் பொதுத்தேர்வில்; நொயிஸ் மற்றும் பொண் தமிழாலயங்கள் முதலாம் நிலைகளையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
தாய்த்தமிழை வளர்க்கும் தூயபணியில் தமிழாலயங்களில் இணைந்து பணியாற்றிவரும் ஆசிரியப் பெருந்தகைகளினதும் செயற்பாட்டாளர்களினதும் பணித்திறன்களைப் போற்றும் வகையில் 5,10,15 ஆண்டுகள் பணிநிறைவிற்கான மதிப்பளிப்பும், 20ஆண்டுகள் பணித்திறனாற்றியவர்களுக்கு ~தமிழ் வாரிதி| என்றும் 25 ஆண்டுகள் பணித்திறனாற்றியவர்களுக்கு „தமிழ் மாணி“ என்றும் பட்டமளித்துப் பாராட்டப்பட்டமை சிறப்புக்குள் சிறப்பானது. இவர்களைத் தாண்டி 30 ஆண்டுகள் பணித்திறனாற்றிய திறனாளர்களுக்குத் தமிழ்க் கல்விக் கழகத்தின் உயர்விருதான முப்பது ஆண்டுகளைச் சுட்டும் மூன்று உடுக்கள் பொறிக்கப்பட்ட பதக்கத்தை அப்பணியாளர்களின் நெஞ்சோடு பதித்து அவர்கள் ஆற்றிய பணியின் சிறப்பு வரலாற்றில் பதிவாக்கப்பட்டது. இம்மதிப்பளிப்பை குக்கெல்கோவென் தமிழாலயத்தில் 30 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய „தமிழ் மாணி“ திருமதி கலா ஜெயரட்ணம் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
பன்மொழிச் சூழலுள் வாழும் தமது பிள்ளைகளைத் தமிழோடு இணைத்துப் பயணிக்க வைத்திருக்கும் தமிழ்ப் பெற்றோரது அயராத உழைப்பும்; ஆசான்களின் ஒருங்கிணைந்த முயற்சியின் பயனாக ஆண்டு 12வரை தமிழாலயங்களில் கற்றலை நிறைவு செய்தோருக்கான மதிப்பளிப்பு, தமிழ்க் கல்விக் கழகத்தின் மற்றொரு பரிமாணமாய் விளங்கியது. மதிப்பளிப்பு நிகழ்வுகளின் இடையிடையே தமிழாலயங்களின் மாணவர்கள் வழங்கிய கலைநிகழ்வுகள் அகவை நிறைவு விழாவை மேலும் மெருகூட்டியது. இந்நிகழ்வுகளில் காவடி,கரகம்,பொய்க்காற் குதிரை நடனம் தாயகத்தில் ஆடப்படும் ஆடலுக்கு நிகராக எமது மாணவர்கள் ஆடியமை சிறப்பு.
நிறைவாக விழாவைச் சிறப்பாக நடாத்திய மாநில மட்டத்திலான இளையோருக்கான மதிப்பளிப்போடு, நன்றியுரையைத் தொடர்ந்து நம்புங்கள் தமிழீழம் என்ற நம்பிக்கையோடு மத்திய மாநிலத்துக்;கான அகவை நிறைவு விழா இனிதே நிறைவுற்றது.

error:
X